தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதிவாதம் செய்யாமல் காலம் தாழ்த்திய அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்
.
ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா,வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை தொடங்குமாறு நீதிபதி டி'குன்ஹா கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர், ‘பல நோய்களால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் 10 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார்'' எனக் கூறி மருத்துவ சான்றிதழை பவானிசிங் சமர்ப்பித்தார்.

அதை பரிசோதித்த நீதிபதி டி'குன்ஹா, ``இந்த மருத்துவ சான்றிதழில் ஏற்கத் தக்க காரணங்களோ, நீங்கள் (பவானி சிங்) குறிப்பிடும் காரணங்களோ எதுவும் இல்லை. மருத்துவரின் பெயரோ, மருத்துவமனையின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. அதனால் ஏற்க முடியாது’ எனக் கூறினார்.
மேலும், பவானி சிங்கை இறுதிவாதம் செய்யும்படி அறிவுறுத்தினார்.அதற்கு அவர்,''இறுதிவாதத்திற்கு இன்னும் தயாராகவில்லை. எனக்கு சில நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 'நீங்கள் இறுதிவாதம் செய்கிறீர்களா?'' என அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி-யிடம் நீதிபதி வினவினார்.

இந்நிலையில் ``முருகேஷ் மரடி இறுதிவாதம் செய்ய அனுமதிக்க முடியாது'' என பவானிசிங் கூறினார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி டி'குன்ஹா,``அரசு வழக்கறிஞர் பவானி சிங் இப்போதும் அவர் இறுதிவாதம் செய்ய தயாராகவில்லை. எனவே குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அவருடைய ஒருநாள் ஊதியத்தை (அரசு வழக்கறிஞரின் ஒருநாள் ரூ.60 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கிறேன்.இதே போல வாதிடாமல் காலம் தாழ்த்தினால்,ஒவ்வொரு வாய்தாவிற்கும் ஒரு நாள் ஊதியம் அபராதமாக விதிக்கப்படும்'' என்றார்.

ஜெ. தரப்பு அதிருப்தி

நீதிபதி டி'குன்ஹா தொடர்ந்து பேசுகையில், ``வழக்கின் அடுத்த விசாரணையை சனிக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைக்கிறேன். அரசு வழக்கறிஞர் தன்னுடைய இறுதிவாதத்தை தொடங்க வேண்டும். அவர் இறுதி வாதத்தை தொடங்காவிட்டால், இவ்வழக்கில் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தரப்பில் இறுதி வாதத்தை தொடங்க வேண்டும்''என்றார்.
இதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமாரும், சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதனை நீதிபதி டி'குன்ஹா ஏற்கவில்லை.

குறுக்கு விசாரணை

இந்நிலையில், மெடோ அக்ரோ நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி டி'குன்ஹா பேசுகையில்,``லெக்ஸ் பிராப்பர்ட்டி தாக்கல் செய்திருக்கும் மற்றொரு மனு மீதான விசாரணையும், மெடோ அக்ரோ நிறுவனத்தின் மனு மீதான விசாரணையையும், தீர்ப்பையும் மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்''என்றார்.
அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் மூர்த்திராவ் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.