Monday, November 25, 2013

தமிழகத்தில் ஒரே நாளில் 13 லட்சத்து 60 ஆயிரம் வழக்குகளில் தீர்வாகி, 1041 கோடி ரூபாய் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.



Nationwide lok adalats to dispose of 39 lakh pending cases





Madras highcourt advocates association ;
Nov 24 2013 ·

இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடந்த ‘லோக் அதாலத்’:

தமிழகத்தில் 13½ லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

ரூ.1041 கோடி வழங்கப்பட்டது


சென்னை, நவ.24-2013
தமிழகத்தில் ஒரே நாளில் 13 லட்சத்து 60 ஆயிரம் வழக்குகளில் தீர்வாகி, 1041 கோடி ரூபாய் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

‘லோக் அதாலத்’
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நேற்று ஒரு நாளில் மக்கள் மன்றம் என்று அழைக்கப்படும் ‘லோக் அதாலத்’ நடத்தப்பட்டது. இதை டெல்லியில் இருந்தபடி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.சதாசிவம் தொடக்கிவைத்தார்.

லோக் அதாலத் தொடக்க விழாவை பார்ப்பதற்கும், அவர் பேசுவதை கேட்பதற்கும் அனைத்து மாநில ஐகோர்ட்டுகள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ‘வீடியோ கான்பரன்சிங்’ என்ற காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டில் வெண் திரை

சென்னை ஐகோர்ட்டில் கூட்ட அரங்கு மற்றும் பல இடங்களில் இதற்கான வெண் திரை வைக்கப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் உள்பட அனைத்து நீதிபதிகள், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் மற்றும் சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் இந்த நிகழ்ச்சியை திரையில் பார்த்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது:-
விரைவாகவும், சரியாகவும்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு இந்த லோக் அதாலத்தை தேசம் முழுவதும் நடத்துகிறது. ஏழை, எளியவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமல்ல, அவர்களுக்கு விரைவாகவும், சரியாகவும் நீதி வழங்கப்பட வேண்டும்.
மேலும், பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை இதன் மூலம் குறைக்கப்பட்டு பணிச்சுமையும் எளிதாகும். நீதியை விரைவாக பெறும் நடவடிக்கையாக ‘லோக் அதாலத்’ நடத்தப்படுகின்றது.

அதிகபட்சம்

இந்தியா முழுவதும் 37 லட்சம் வழக்குகளை லோக் அதாலத் மூலம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் சிறு குற்ற வழக்குகள், செக் மோசடி, வங்கி கடன், சிவில், விபத்து காப்பீடு, பணிகள், குடும்ப பிரச்சினைகள் ஆகிய வழக்குகள் அடங்கும்.
இந்தியாவில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 7.97 லட்சம் வழக்குகளும், மராட்டிய மாநிலத்தில் 5.66 லட்சம் வழக்குகளும் ‘லோக் அதாலத்’தில் விசாரிப்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. இதுபோன்ற ‘லோக் அதாலத்’கள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

14 ‘பெஞ்ச்’கள்

அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஐகோர்ட்டு முதல் தாலுகா அளவிலான கோர்ட்டுகள் வரை ‘லோக் அதாலத்’துகளில் விசாரணை தொடங்கியது. சென்னை ஐகோட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து ஐகோர்ட்டு வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட ‘லோக் அதாலத்’தை நடத்தின.
சென்னை ஐகோர்ட்டு வழக்குகளுக்காக 14 லோக் அதாலத் ‘பெஞ்ச்’கள் நியமிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு லோக் அதாலத்திலும் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரும், உறுப்பினராக வக்கீல்கள் இரண்டு பேரும் அமர்ந்தனர். ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள், அப்பீல் வழக்குகள் போன்றவை இருதரப்பினரின் ஒப்புதலை பெற்று, லோக் அதாலத் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருந்தன.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

அந்த பட்டியல் வரிசைப்படி விசாரணை நடத்தப்பட்டது. சில வழக்குகளில் வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டனர். சில வழக்குகளில் இருதரப்பினரிடையே உடனடியாக தீர்வு ஏற்பட்டது. அவர்களுக்கு உடனே சேர வேண்டிய தொகை காசோலை மூலம் வழங்கப்பட்டது.

விபத்து, நஷ்டஈடு, கடன் வழக்குகள் தொடர்பாக தனித்தனி லோக் அதாலத் பெஞ்ச்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பாதிக்கப்பட்ட நபர்கள், வங்கி நிர்வாகிகள், காப்பீட்டு நிறுவன நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லோக் அதாலத் விசாரணைக்காக ஐகோர்ட்டு வளாகத்தில் கூடியிருந்தனர்.

இலவச மதிய உணவு

காயமடைந்தோர், மாற்றுத்திறனாளிகள், மிகவும் வயதானவர்கள் சிலரும் லோக் அதாலத்தில் ஆஜரானார்கள். சிட்டி சிவில் கோர்ட்டுகள், குடும்பநல கோர்ட்டுகளில் உள்ள பல வழக்குகளும், சிறு குற்ற வழக்குகளும் லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டன. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது.

பின்னர் மாலை 4 மணிக்கு மேல் ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ் அக்னிகோத்ரி, என்.பால்வசந்தகுமார், ஆர்.சுதாகர், எஸ்.மணிக்குமார், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் அருள் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நீதிபதி ஆர்.சுதாகர் கூறியதாவது:-

13½ லட்சம் வழக்குகள்

பலரால் வழக்குகளை கோர்ட்டில் நடத்த முடியாத நிலையை சுப்ரீம் கோர்ட்டு உணர்ந்து, அவர்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக மெகா லோக் அதாலத்தை இந்தியா முழுவதும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி, வெற்றிகரமாக இதை நடத்தி முடித்துள்ளோம்.

நேற்று இரவு வரை தமிழகம், புதுச்சேரி முழுவதும் 13 லட்சத்து 60 ஆயிரம் வழக்குகளில் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1041 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு லோக் அதாலத்தில் பட்டியலிடப்பட்ட ஆயிரத்து 370 வழக்குகளில் 233 வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டு ரூ.12 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு லோக் அதாலத்தில் பட்டியலிடப்பட்ட 700 வழக்குகளில் 80 வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டு ரூ.3 கோடியே 50 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நல்ல ஒத்துழைப்பு

இந்த அளவுக்கு லோக் அதாலத் மூலம் வழக்குகளை விசாரித்து முடிப்பதில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம். இந்த நடவடிக்கைகள் மேலும் தொடரும். இந்த மெகா லோக் அதாலத் வெற்றிகரமாக நடப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தந்தனர்.
எனவே ஏழை எளியோர், கோர்ட்டுகளில் வழக்குகளை நடத்த முடியாமல் தவிப்பவர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் தங்கள் வழக்குகளை லோக் அதாலத் மூலம் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

ஏனென்றால், லோக் அதாலத்துக்கு கொண்டு வரும் வழக்குகளுக்காக கட்டணம் செலுத்த தேவையில்லை. கோர்ட்டில் தாக்கல் செய்யும்போது செலுத்தி இருந்த கட்டணத்தை, லோக் அதாலத்துக்கு அந்த வழக்கை கொண்டு வரும்போது திருப்பிக் கொடுத்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

படுக்கையில் வந்தவர்
சென்னை ஐகோர்ட்டு மூலம் நடந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டு அதிக தொகை வழங்கப்பட்ட வழக்குகளும் உள்ளன. சாலை விபத்தில் கடுமையாக காயமடைந்த பெண் ஒருவர் கடந்த 7 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் லோக் அதாலத் விசாரணைக்காக தூக்கு படுக்கை மூலம் வந்து, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்பு ஆஜரானார்.

அந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் மற்றும் அந்த பெஞ்சின் உறுப்பினர்கள் நர்மதா சம்பத், சீமைதுரை ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில் அந்த பெண்ணுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.75 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

விஞ்ஞானிக்கு நிவாரணம்
தனியாருக்கும், ஒரு வங்கிக்கும் இடையே உள்ள கடன் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று லோக் அதாலத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதில், ரூ.8 கோடி தொகை செட்டில் செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குள் அந்த தொகை செலுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பெசன்ட்நகரைச் சேர்ந்த விஞ்ஞானி சீனிவாசன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் 3 முறை தலையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

நஷ்டஈடு கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு, ஐகோர்ட்டு மூலம் நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் சீனிவாசனுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈட்டை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக் கப்பட்டது. அந்த தொகைக் கான காசோலையை அவருக்கு ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ் அக்னிகோத்ரி வழங்கினார்.

தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவு வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment