Showing posts with label நீதிநாயகம் சந்துரு. Show all posts
Showing posts with label நீதிநாயகம் சந்துரு. Show all posts

Sunday, November 10, 2013

குறையொன்றுமில்லை





 நீதிநாயகம் சந்துரு தி இந்து  நவம்பர் 6, 2013

கடமையைத்தானே செய்தோம், அதற்கு வழியனுப்பு விழா அரசு செலவில் மனித ஆற்றல் விரயத்துடன் தேவையில்லை என்ற கருத்திற்கு ஓய்வு விழாவில் நீதிபதி சுதந்திரம் எதிர்வினையாற்றியுள்ளார். 

வரவேற்பு விழா போல் விடையனுப்பு விழாவை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை எனக்கூறிய அவர், அவ்விழாவிற்கான அரசு செலவினம் பற்றியும் மனித ஆற்றல் விரயத்தைப் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. 

காலையில் அரசு வாகனத்தில் வந்திருப்பினும் மாலையில் சொந்த வாகனத்தில் வீடு திரும்பப்போவதாகவும், நிச்சயமாக ரயிலில் பயணிக்கப்போவதில்லை என்றும் பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்.

நீதிபதிகளுக்குள்ள வசதிகளையும் சலுகைகளையும் குறிப்பிட்ட அவர் மகிழ்ச்சியுடன் பணியாற்றியதாகவும், ஓய்வூதிய விதிகளைத் தவிர குறையொன்றுமில்லை என்றும் குறிப்பிட்டார். பணியை திருப்திகரமாக செயலாற்றியிருந்தாலும் அதுபற்றிய மதிப்பீட்டை செய்யவேண்டியது வக்கீல்களே என்றும் குறிப்பிட்டார்.

ஒருவர் நீதிபதியாகும் முன்பு எவ்வித தரவுகள் அடிப்படையில் நீதிபதியாகிறார் என்பது பொது அறிவுக்குக் கிட்டாத விஷயம். பத்தாண்டுகள் உயர்நீதிமன்ற வக்கீலாகவோ, மாவட்ட நீதிபதி பொறுப்பில் இருந்தாலோ நீதிபதி பதவிக்குத் தகுதியானவராகக் கருதப்படுவர்.

 அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத வேறு காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் அவை பொதுப்படையாக அறிவிக்கப்படாத காரணிகளாகவே இருக்கின்றன. நீதிபதிகள் நியமனம் பற்றிய கோப்புக் குறிப்புகளை தருமாறு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் போட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து நியமனக் கோப்புகளின் ரகசியத்தை உறுதி செய்தது.

குடியரசுத் தலைவரால் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர், நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தைக்காகவோ, இயலாமைக்காகவோ மட்டுமே நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குப்பதிவின் மூலம் பதவி நீக்கப்படுவர். 

இயலாமைக்காக யாரும் இதுவரை நீக்கப்பட்டதில்லை. முறையற்ற சொத்துக் குவிப்பு (அ) நிர்வாக சீர்கேடு விளைவித்த செயல்களுக்காக பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் எடுத்த மூன்று நடவடிக்கைகளும் முற்றுப் பெறாமலே முடிந்துபோயின.

நியமிக்கப்பட்ட பின் நீதிபதியின் நடவடிக்கைகளை கண்காணிக்கவோ, விமர்சனம் செய்யவோ சட்டத்தில் இடமில்லை. நீதிமன்ற வராந்தாக்களில் நடைபெறும் கிசுகிசுக்கள், அநாமதேய துண்டு பிரசுரங்கள் (அ) தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும் மொட்டைக் கடிதங்கள் தவிர சுகாதாரமான விவாதங்கள், விமர்சனங்களுக்கும் இடமில்லை. 

வழக்கு விசாரிக்கும் வேகத்தைக்கொண்டு ஆமைகள் என்றும், பந்தயக் குதிரைகள் என்றும் குறிப்பிடுவதும் தீர்ப்புகள் வழங்குவதில் தாராளப் பிரபுக்கள் என்றும் கஞ்சப் பிரபுக்கள் என்றும் பட்டப் பெயர்கள் சூட்டி வக்கீல்கள் மகிழ்வதோடு சரி.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்து ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டாலும், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவருவதில்லை. பத்து சட்டக் கல்லூரிகள் தமிழத்தில் இருப்பினும் சட்டப் பேராசிரியர்களோ, சட்ட வல்லுநர்களோ அவற்றை விமர்சிக்கத் தயங்குகின்றனர். பன்னிரண்டிற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டில் உள்ள சட்ட சஞ்சிகைகளில் தீர்ப்புகள் வெளிவந்தாலும் அந்த சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் தீர்ப்புகள் குறித்து தங்களது கருத்துகளை பதிவதைத் தவிர்த்தேயுள்ளனர்.

2001ல் டெல்லியில் வெளிவந்த ‘Wah India’ என்ற ஆங்கில இதழ் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளை தரவரிசைப்படுத்த ஐம்பது மூத்த வழக்கறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு தரவரிசையை வெளியிட்டது. அப்பத்திரிகையின் ஆசிரியர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு சுயமாக தொடரப்பட்டு அவர்கள் மன்னிப்பு கோரிய பின் விடுவிக்கப்பட்டதுடன் ‘டாப் டென்’ நீதிபதிகளைப் பட்டியலிடுவது முடிவுக்கு வந்தது.

நீதிபதிகள் பைசல் செய்யும் வழக்கு விவரங்கள் தேசிய தகவல் மையத்தில் (NICNET) தினசரி பதிவு செய்யப்பட்டு வந்தாலும் அவ்விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வினவியோருக்கு துல்லியமாக வழங்கப்படுவதில்லை.

நீதிபதிகள் எவ்வித மதிப்பீட்டிற்கும் அப்பாற்பட்டவர்களா? 

நீதிபதி கேட்டுக்கொண்டபடி வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதா?

எப்பொறுப்பில் இருப்பினும் வள்ளுவர் வாக்கை யாரும் மறக்கக்கூடாது.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்” (குறள்- 448)

Thursday, October 24, 2013

நீதிநாயகம் சந்துரு :காவல் நிலையத்திலா நீதி?




   தி இந்துஅக்டோபர் 23, 2013


சென்னை அண்ணா சதுக்கம், மகாகவி பாரதி நகர், பெருமாள்புரம், திருப்பூர் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலையங்களுக்கே வக்கீல்கள் சென்றதும் அங்கு ஏற்பட்ட வாய்த் தகராறுகள், அதைத் தொடர்ந்து நடந்த கைதுகள், பின்னர் நீதிமன்ற புறக்கணிப்புகள் நடந்ததைப் படித்தோம்.

அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து காவல்துறைத் தலைவரின் அலுவலகத்துக்குச் சென்ற வக்கீல் சங்கத் தலைவர்களை அவர் பார்க்காமல் உதாசீனப்படுத்தியதற்காக அவரது பதவி நீக்கம் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சச்சரவுகளையொட்டி, வக்கீல்கள் காவல் நிலையங்களுக்குப் போகலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்ற விழா ஒன்றில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன், “காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு நடத்தாதீர்கள். நீதிமன்றத்துக்கு வந்து வாதாடுங்கள்” என்று வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 20-22 பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. தனக்கு எதிராகவே சாட்சி சொல்ல குற்றவாளிகளை வற்புறுத்தக்கூடாது என்றும், கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்கவும், வக்கீலைக் கலந்தாலோசித்து உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ‘காவலரிடம் அளிக்கும் வாக்குமூலத்தை சாட்சியமாகக் கொள்ளக்கூடாது. நீதிமன்றத்திடமே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்பும் கைதியிடம், கொடுக்கப்போகும் வாக்குமூலம் அவருக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்று எச்சரித்த பின்னர் காவலர்கள் உட்பட எவரையும் அனுமதிக்காமல் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்ய வேண்டும்’ என்று காலனியாதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட சான்றியல் சட்டத்தில் பாதுகாப்புள்ளது. 

கைதிகளைச் சித்திரவதைக்குட்படுத்தி பெற்ற வாக்குமூலத்தை விசாரணையில் பயன்படுத்தி தண்டனை தரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதனால் இத்தகைய சட்டப் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டன..

பம்பாய் தொடர் குண்டு தாக்குதல் கைதியான அப்துல் கசாபிற்கு இதுபோன்ற பாதுகாப்புகள் வழங்காததனால் அவரை விடுதலை செய்யவேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதடப்பட்டது.” மிராண்டா “ என்பவர் வாக்குமூலம் அளிக்குமுன் அவருக்கு வாக்குமூலம் கொடுக்க கட்டாயமில்லையென்று காவலர்கள் கூறாததனால் அவ்வழக்கு நிலைக்கத் தக்கதல்ல என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கூறிய தீர்ப்பை ஆதாரமாகக் காட்டிய போது நமது உச்சநீதிமன்றம் அவ்வாதத்தை நிராகரித்து அரசியலமைப்புச் சட்டத்திலும் சான்றியல் சட்டத்திலும் கைதிகளுக்குப் பாதுகாப்புகள் இருப்பதனால் மிராண்டா தீர்ப்பு இங்கு பொருந்தாதென்று கூறி விட்டது.

திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் கட்சிக்காரர்களுக்காக சென்ற வக்கீல் அய்யாத்துரை காவலர்களால் தாக்கப்பட்டதையெதிர்த்து நடைபெற்ற தொடர் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிபதி பால் கமிஷன்(1979) அமைக்கப்பட்டது. அவர் வக்கீல்கள் காவல்நிலையத்திற்குச் செல்வது முறையற்றது, தொழில் நெறிமுறைக்கு மாறானது என்று அறிக்கையளித்தார்.

தற்பொழுது கிரிமினல் வழக்குகள் மட்டுமல்லாமல், சிவில் வழக்குகளும் காவல்நிலையங்களிலேயே பைசல் செய்யப்படுகின்றன. தகராறுகளை விசாரிக்கும்போது இரு தரப்பு வக்கீல்களும் ஆஜராகின்றனர். ஒரு தரப்பிற்கு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி எழும் வாய்த்தகராறுகள் முற்றி கைகலப்பாக மாறி காவல்துறையின் மீதே குற்றம் சாட்டி எழும் பிரச்சினைகள், நீதிமன்ற புறக்கணிப்பிற்கும் இட்டுச் செல்கின்றன.

 இச்செயல்கள் தனிப்பட்டவர்களின் சிவில் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லமையுடைய நீதிமன்றங்களின் நடவடிக்கைகளையே முடக்கிப் போடும் அவலம் உலகில் வேறெங்குமில்லை. காவலர்களின் அத்துமீறலை தடுக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும், உரிமையியல் நடைமுறைச் சட்டத்திலும் போதுமான அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்குள்ளது.

நீதிபதி தந்த அறிவுரையையேற்று வக்கீல்கள் நீதிமன்றத்திற்குள்ளேயே வழக்குகளை நடத்த முற்படுவதே சிக்கல்களைத் தீர்க்கும் ஒரே வழியென்று சொல்லவும் வேண்டுமா?

Tuesday, October 22, 2013

மூத்த வழக்கறிஞர் யார்?






நீதிநாயகம் சந்துரு :தி இந்து  :அக்டோபர் 21, 2013

‘மூத்த வழக்கறிஞர்’ (Senior Advocate) என்ற அந்தஸ்துக்கான புதிய நடைமுறைகளை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. 1961-ம் வருட வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 16-ன் படி வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என்று இரு வகையாக்கப்பட்டு புதிய அந்தஸ்து வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களின் திறமை, அனுபவம் மற்றும் தனி அறிவைப் பொறுத்து அந்தஸ்து வழங்கப்பட்டு, அவர் நீதிபதி அணியும் அங்கியை போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுவர். நேரடியாக கட்சிக்காரருடன் பேசுவதும், கட்டணம் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளது. வக்கீல் ஒருவருடன் மட்டுமே அவர் ஆஜராகலாம். இந்த நடைமுறை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அங்கு ராணியின் வக்கீல் (Queen’s Counsel) என்றழைக்கப்படுகின்றனர்.

ஒரே தொழில் புரிபவர்கள் ஏன் வகைப்படுத்தப்பட்டனர்? என்ற கேள்வி எப்போதும் எழுப்பப்படுகிறது. நீதியரசர்களுக்கு கட்சிக்காரர்களுடைய ஊதுகுழலாக இல்லாமல் சட்டச் சிக்கல்களில் முறையான ஆலோசனை வழங்கவே இப்படிப்பட்ட அந்தஸ்து வழங்கப்படுகிறது. கௌரவங்கள் அனைத்தும் சமீபகாலங்களில் சீரழிந்து வருவது போல் இந்த அந்தஸ்து பெற்றோரும் பார் கவுன்சிலின் விதிகளின்படி செயல்பட தவறுகின்றனர். கட்சிக்காரர்களுடன் தொடர்பு, நேரடியாக கட்டணம் கேட்டுப் பெறுவது, அவர்களுக்கான மனுக்களை எழுதித் தருவது, தங்கள் பெயரிலேயே வக்கீல் நிறுவனம் நடத்த அனுமதிப்பது போன்ற கௌரவமற்ற நடைமுறைகள் தொடர்கின்றன.

மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்க உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் விதிமுறைகளை வகுத்துள்ளன. 3 நீதிபதிகளே உள்ள சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இரு ஆண்டுகளுக்கு முன்பு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து பெற்றனர். அவர்களில் ஒருவரும் சிக்கிம் மாநிலத்தில் தொழில் நடத்துபவர்கள் அல்ல. தாங்கள் தொழில் நடத்தும் உயர் நீதிமன்றத்தில் அந்தஸ்து பெற முடியாதவர்கள், சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் பெற்றது எப்படி என்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கும் விதிமுறைகளை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வக்கீல் சங்கம் தொடர்ந்த வழக்கில், அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில்தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதற்கான வழிமுறைகளை உருவாக்க, 7 நீதிபதிகள் குழு 1995-ல் அமைக்கப்பட்டது. அதன்படி, 15 வருட அனுபவமும் வருடத்துக்கு 2 லட்சத்துக்கு மேல் வருமானமும் 2 மூத்த வழக்கறிஞர்களின் சிபாரிசுகளுடன் மனு செய்து நீதிபதிகளின் ரகசிய வாக்குப்படி யார் 75% வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கே மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்படும் என்ற நடைமுறை உருவாக்கப்பட்டது.

கடுமையான இவ்வழிமுறைகளை மாற்றக் கோரிய முறையீடுகள் தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா, ஏ.கே.கங்குலி, எச்.எல்.கோகலே காலங்களில் நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இக்பாலின் முயற்சியால் மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெற்றால் போதுமென கூறப்பட்டது. மேலும் அவர் விரும்பினால் யாருக்கு வேண்டுமானாலும் அந்தஸ்தை வழங்கவும் உரிமையெடுத்துக் கொண்டார். சக நீதிபதிகள் சிலர் எதிர்ப்புக்குப் பின்னரும் எடுத்துக் கொண்ட அதிகாரத்தை அவர் விடத் தயாரில்லை.
தற்போது 5 நீதிபதிகள் குழு உருவாக்கிய புதிய பரிந்துரைகளின்படி, 10 நீதிபதிகள் கொண்ட குழு தகுதி, திறமை அடிப்படையில் பெயர்களை பரிந்துரை செய்யவும், குழுவினரிடையே ஒருமித்த கருத்து இல்லையென்றால் இறுதி முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் தலைமை நீதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை யார் பெற்றாலும், பார் கவுன்சிலின் விதிகளின்படி நடந்து கொண்டால் மட்டுமே கௌரவம் காக்கப்படும்.