Showing posts with label ரிசர்வ் வங்கி. Show all posts
Showing posts with label ரிசர்வ் வங்கி. Show all posts

Tuesday, August 5, 2014

கடனை வேண்டுமென்றே செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்பிஐ-செபி ஆலோசனை



தி இந்து:செவ்வாய், ஆகஸ்ட் 5, 2014


வேண்டுமென்றே வங்கியில் பெற்ற கடனை செலுத்தாத நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிட்டிருந்தால் அவற்றின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விதி முறைகள் விரைவில் வெளியாகும் என செபி தெரிவித்துள்ளது.

வங்கியில் கடன்பெற்று அந்தக் கடனை திரும்ப செலுத்த போதிய நிதி ஆதாரம் இருந்தும், அந்த நிதியை வேறு திட்டங்களில் பயன்படுத்திவிட்டு, கடனை செலுத்தாமல் சில நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வங்கியின் வாராக் கடன் அளவைக் குறைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக நம்புகிறது. இத்தகைய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிட்டிருந்தால் அவற்றின் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய நிறுவனங்களை தடை செய்வது குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை திட்டவட்டமான முடிவு எதையும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இத்தகைய நிறுவனங்கள் பற்றிய விவரத்தை செபி-யுடன் பகிர்ந்து கொள்வதற்கு ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது.

பொருளாதார தேக்க நிலை காரணமாக சில நிறுவனங்கள் உண்மையிலேயே நிதி ஆதாரம் இல்லாமல், கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளிக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் தவிர்த்து பிற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்படுகிறது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு மிக அதிக தொகையை செலுத்தத் தவறிவிட்டது. இருப்பினும் இந்நிறுவனத்தை வில்புல் டிபால்டர்ஸ் பட்டியலில் சேர்க்க இன்னமும் சில வங்கிகள் தயங்குவதாக செபி தலைவர் யு.கே. சின்ஹா குறிப்பிட்டார்.

இந்த வார கடைசியில் செபி இயக்குநர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை மற்றும் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை ஆகியன குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். உள்பேர வர்த்தகம் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thursday, July 24, 2014

நஷ்டமடையும் தொழிலில் இருந்து வெளியேற புதிய நடைமுறை: ரிசர்வ் வங்கி தீவிர பரிசீலனை


தி இந்து:வியாழன், ஜூலை 24, 2014

நலிவடைந்து திவாலாகும் தொழில் நிறுவனங்களிலிருந்து தொழில் முனைவோர் வெளியேறு வதற்கு புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி வகுத்து வருகிறது. இத்தகவலை ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் பி.மஹாபாத்ரா தெரிவித்தார்.

முடங்கியுள்ள சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக அசோ சேம் ஏற்பாடு செய்திருந்த கருத் தரங்கில் புதன்கிழமை பேசிய அவர், இந்தியாவில் திவாலாகும் தொழிலிலிருந்து வெளி யேறுவதற்கு உரிய நடைமுறை இல்லை. ஏனெனில் நம்மிடையே தோல்வியை ஏற்கும் பக்குவம் கிடையாது. அத்துடன் மேலும் இந்தியர்களுக்கு தோல்வியே பிடிக்காது. இதனால்தான் இதற்கு உரிய வழிகாட்டுதல் வகுக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டினார்.
லாபம் தராத நிச்சயம் திவாலாகிவிடும் என்ற தொழிலிலிருந்து தொழில் முனைவோர் வெளியேறு வதற்கு உரிய வழிகாட்டுதலை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் தாங்கள் கடன் வழங்கிய தொழில் முனைவோருக்கு ஆலோசனை அளிக்க முடியும். இதனால் முற்றிலுமாக மூழ்கிப் போகும் நிலையிலிருந்து முன்னதாகவே வெளியேற முடியும்.
திவால் என்றவுடனேயே அனைத்தும் மூழ்கிப் போய், மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததைப் போன்ற நினைப்புதான் பலரது மத்தியில் நிலவுகிறது. இதனாலேயே எவரும் தன்னை திவாலான பேர்வழி என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. ரிசர்வ் வங்கி வகுக்கும் வழிகாட்டுதல் மூலம் தொழில் முனைவோர் முன்னதாகவே நஷ்டத்தை எதிர்கொள்ளும் தொழிலிலிருந்து வெளியேற வழியேற்படும்.

சட்டரீதியாக இவ்விதம் வெளி யேறுவதற்கு நிறுவன சட்ட விதிகளில் இடமிருந்தாலும், வங்கிகளுக்கு இது தொடர்பாக உரிய வழிகாட்டுதலை அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். 

வங்கிகளின் வாராக் கடன் குறித்து பேசிய அவர், இதில் முடங்கிய சொத்துக்களும் அடங்கும் என்றார். இருப்பினும் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

வங்கிகளுக்கு அதிக தொகை கடனாக வைத்திருப்பவர்கள் குறித்த தகவல் தொகுப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதன் மூலம் ஒரு வங்கியில் அதிகம் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர் பற்றிய விவரத்தை மற்ற வங்கிகள் பெற முடியும். 

இந்த தகவல் பகிர்வு காலாண்டு அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Sunday, June 15, 2014

கடன் அட்டை தவணைக்கு ஒரு மாதம் வரை தாமதக் கட்டணம் கிடையாது: ஆர்பிஐ உத்தரவு


              தி இந்து    ஞாயிறு, ஜூன் 15, 2014

கடன் அட்டை நிலுவை செலுத்துவதில் கால தாமத கட்டணம் வசூலிப்பதில் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்கலாம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடன் அட்டை தவணை செலுத்துவோருக்கு மிகப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

பொதுவாக கடன் அட்டை அறிக்கை (ஸ்டேட்மெண்ட்) அளிக்கும் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். கடன் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்விதம் குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்தாவிடில் வங்கிகள் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த அளவானது ரூ. 100 முதல் ரூ. 700 வரை உள்ளது. செலுத்த வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன.

குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்விதம் தவணைத் தொகை செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத் துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. இப்புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கால தாமதக் கட்டணமானது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. இது குறைந்த பட்சம் ரூ. 100-லிருந்து ரூ. 700 வரை உள்ளது. பொதுவாக மின்சாரம் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் தொகையை செலுத்தாவிடில் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் கடன் அட்டை வழங்கிய வங்கிகள் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டியை வசூலிக்கின்றன. அத்துடன் குறித்த தேதியில் செலுத்தாததற்கு தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கிறது.

குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. வங்கிகள் பல சமயங்களில் இது தொடர்பான அறிவிப்பை முன்னதாகவே வாடிக் கையாளருக்குத் தெரிவித்து விடுகின்றன.

ஆனால் சில தனியார் வங்கிகள் குறித்த தேதியிலிருந்து 10 தினங்களுக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிடில் அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன.

வாடிக்கையாளருக்கு 72 நாள் அவகாசம் தருவதாக கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகே அட்டையின் செயல்பாடு முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளருக்கு 75 நாள் அவகாசம் அளிக்கிறது.